செய்திகள்
குளத்தில் மூழ்கி இறந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் உத்தரவு
கும்மிடிப்பூண்டியில் கோவில் குளத்தில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (14-7-2021) காலை 10-45 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, நர்மதா (வயது 11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காகத் சுமதி (வயது 35), ஜோதி (வயது 35), அஸ்விதா (வயது 14), ஜீவிதா (வயது 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...வரும் காலம் பா.ஜ.க.வின் காலம்-அண்ணாமலை பரபரப்பு பேச்சு