குன்னூரில் இளம்பெண் மர்ம மரணம்- போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
ஊட்டி:
குன்னூர் அருவங்காடு நேரு நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் ஆனந்தி (22). இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அருவங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆனந்தி சாவில் சந்தேகம் உள்ளது என கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அருவங்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஆனந்தியின் உறவினர் பிரேமா கூறும் போது, ஆனந்தி இறந்த பின் சம்பவ இடத்தில் இருந்த பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய வேண்டும்.
ஆனந்தி மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காவிட்டால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு அளிப்போம் என்றார்.