செய்திகள்
லாரிக்கு அடியில் கார் சிக்கி சேதமடைந்திருப்பதை காணலாம்

சிவகங்கை அருகே லாரி மீது கார் கவிழ்ந்து விபத்து- பெண் டாக்டர் பலி

Published On 2021-09-09 08:20 GMT   |   Update On 2021-09-09 08:20 GMT
சிவகங்கை அருகே விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியைச் சேர்ந்தவர் ஆதப்பன். இவரது மனைவி இந்திரா (வயது 60). டாக்டரான இவர் மதுரையில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார்.

இன்று காலை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் வழியாக காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்றது. எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து டாக்டர் சென்ற கார் மீது மோதி அப்படியே கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய டாக்டர் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் காரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்த காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். டாக்டர் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News