செய்திகள்
ஆப்கானிஸ்தான் - தலிபான்களின் கண்ணிவெடியில் சிக்கி 8 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் கண்ணிவெடியில் சிக்கிய 8 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்துக்குட்பட்ட முக்கெர் மாவட்டத்தில் ராணுவத்தினரை கொல்வதற்காக சாலையோரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் நேற்று சிக்கிய 8 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த மேலும் இரு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.