செய்திகள்
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

சிஏஏ: அனைவரையும் வரவேற்கும் நாடு இருந்தால் காட்டுங்கள்? - மத்திய மந்திரி சவால்

Published On 2020-03-07 11:13 GMT   |   Update On 2020-03-07 11:15 GMT
உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என கூறும் ஒரு நாட்டை காட்டுங்கள் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

குடிரியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. 

இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை ஜெய் சங்கர் கூறுகையில், ''குடியுரிமை திருத்தச்சட்டம் மூலமாக நாடு இல்லாத மக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இது பாராட்ட வேண்டிய விஷயம். நமக்கு (இந்திய மக்கள்) எந்த வித பிரச்சனைகளும் வராத வகையில் சிஏஏ செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிஏஏ-வை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதலும், கொள்கைகளும் உள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என கூறும் ஒரு நாட்டை காட்டுங்கள் பார்ப்போம். எந்த நாடும் அவ்வாறு கூறுவதில்லை’’ என்றார்.  

மேலும், நமது நட்பு நாடுகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி, ''நமது உண்மையான நண்பர்கள் யார் என்ற விவரம் தற்போது தெரியவரலாம்’’ என்றார். 

Tags:    

Similar News