செய்திகள்
விபத்து

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பலி

Published On 2020-11-20 21:09 GMT   |   Update On 2020-11-20 21:09 GMT
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் ஊராட்சி உறுப்பினர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது47). அதே ஊரை சேர்ந்தவர் குணசேகரன் (35). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தில் தனது உறவினர் துக்கநிகழ்ச்சிக்காக மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் கண்டியூரில் பொருட்களை வாங்கி கொண்டு திருவையாறுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கண்டியூர் வழியாக திருவையாறு நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. நடுக்கடை மெயின்ரோட்டில் வந்தபோது முன்னாள் சென்ற மோட்டார்சைக்கிளும், டிப்பர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட முருகானந்தம், குணசேகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகானந்தம், குணசேகரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன முருகானந்தம் பட்டுக்குடி ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இறந்து போன குணசேகரனுக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News