ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

Published On 2021-01-04 03:46 GMT   |   Update On 2021-01-04 03:46 GMT
மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 29-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து காட்சி அளித்தது.

இந்த மகா தீபத்திற்கு ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.

மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப ‘மை’ அணிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10-க்கு தீப ‘மை’ பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கியும் ‘மை’ பிரசாதத்தை பெற்று கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கோவிலில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News