தொழில்நுட்பச் செய்திகள்
எதிர்கால வளர்ச்சி இதுதான்...மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தப்போகும் சாம்சங்
மெட்டாவெர்ஸ் சாதனங்களை உருவாக்குவதற்கு பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டு மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன் கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் பலவும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்த சாதனங்கள், சேவைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமான சாம்சங், இனி மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் கூறியதாவது:-
எதிர்காலம் மெட்டாவெர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் சார்ந்து தான் இருக்கும். இதனால் மெட்டாவெர்ஸ் சாதனங்களையும், தீர்வுகளையும் உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்த இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதுவேண்டுமானலும், எங்குவேண்டுமானலும் இருந்து மெட்டாவெர்ஸை அனுபவிப்பதற்கான வகையில் உதவுவோம்.
இனி சாம்சங் நிறுவனம் மெட்டாவர்ஸை சப்போர்ட் செய்யக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்யும். என்னவகையான சாதனங்கள் என்பதை இப்போது கூற முடியாது. இதற்காக பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.
இவ்வாறு சாம்சங் அறிவித்துள்ளது.