உறவினர்களுக்கு கொரோனா தொற்று- வீட்டு தனிமையில் இருப்பதாக கேரள சுகாதார மந்திரி தகவல்
திருவனந்தபுரம்:
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 19, 577 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 17.45 சதவீதமாகும். மாநில அளவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 3212 பேருக்கும், கோழிக்கோட்டில் 2341 பேருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 4978 ஆக உயர்ந்துள்ளது.
கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதற்கிடையே கேரள சுகாதார துறை மந்திரி ஷைலஜாவின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மந்திரி ஷைலஜா வீட்டில் தனிமையில் இருக்கிறார். இது பற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார். அதில் தனது மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. எனக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் நான் தற்போது வீட்டு தனிமையில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.