செய்திகள்
6 மாதத்திற்கு பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்- மே 28ல் நடக்கிறது
கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கும்படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28-ம் தேதி 43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி வாயிலாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டம் மே 28ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில மற்றும் யூனியின் பிரதேங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 42வது கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் 6 மாதங்களுக்கு அடுத்த கூட்டம் நடைபெறுவதால் ஜிஎஸ்டி வரம்பு, இழப்பீடு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படலாம். கொரோனா தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கும்படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.