செய்திகள்
சென்னை - நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை - நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விமான, ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அளவிலான பேருந்துகளும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கும் சூழலில் பயணிகளின் வசதிக்காக, பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பினை தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ளது.
இதன்படி, சென்னை- நாகர்கோவில் இடையே வருகிற 23, 24, 29 ஆகிய நாட்களிலும், நவம்பர் 12, 13 ஆகிய நாட்களிலும் பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது.