வழிபாடு
சாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை கேட் முன்பு பக்தர்கள் வரிசையாக நிற்கும் காட்சி.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாடு

Published On 2022-04-01 03:17 GMT   |   Update On 2022-04-01 03:17 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அமாவாசையை முன்னிட்டு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளை பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வனத்துறையினர் பக்தர்களுக்கு இனிப்புகள் கொடுத்து அனுப்பினர். பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அமாவாசையை முன்னிட்டு மதியம் 12.30 மணியிலிருந்து 2 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அமாவாசை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News