செய்திகள்
திருத்தணி அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருத்தணி அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு பகுதியில் வசிப்பவர் கோபால் (வயது 67). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்க்க வீட்டைப் பூட்டி விட்டு சென்றார். இந்தநிலையில், நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையறிந்து அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதே போல இவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்தவர் சுரேஷ் (40). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், நேற்று இரவு தனது வீட்டை பூட்டிக்கொண்டு தனது மற்றொரு வீட்டிற்கு தூங்கச் சென்றுள்ளார்.
நேற்று காலை இவரது வீட்டு கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த அரை கிலோ வெள்ளி பொருட்கள், 1½ பவுன் நகை ஆகியவை திருட்டு போய் இருந்தன. இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.