உள்ளூர் செய்திகள்
கடைகளில் தடை செய்யப்பட்ட 13 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
பேராவூரணியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி:
தமிழகஅரசு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுறுத்தலின் பேரில், பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், பேரூராட்சி பணியாளர்களால் பழக்கடை, மளிகைக்கடை, உணவகம், தேனீர் கடை, ஆட்டோ ஸ்பேர்ஸ் கடை, பேக்கரி, பெட்டி கடை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒருமுறை பயன்படுத்தும், பிளாஸ்டிக்
பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வின் போது மொத்தம் 13 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.15 ஆயிரத்து 800 அபராதமாக விதிக்கப்பட்டது.
பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.