திருமங்கலம் அருகே நின்றிருந்த வேன் மீது மினி லாரி மோதல்: டிரைவர் உடல் நசுங்கி பலி
திருமங்கலம்:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்தவர் நாயனார் (வயது47). லாரி டிரைவரான இவர் நேற்று மினி லாரி சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி-சிவரக் கோட்டை 4 வழிச்சாலையில் இரவு மினிலாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரத்தில் பழுதான மற்றொரு சரக்கு வேன் நின்றிருந்தது.
இதை கவனிக்காததால் நாயனார் ஓட்டி வந்த மினி லாரி நின்றிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினிலாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த நாயனார் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாயனார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.