செய்திகள்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு- சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2021-05-25 14:51 GMT   |   Update On 2021-05-25 15:58 GMT
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.
சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பால்துரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்றும் தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் சிறையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தப்பிச் செல்லவோ, தலைமறைவாகவோ, சாட்சியங்களை அழிக்கவோ இடமில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இதனையடுத்து ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News