செய்திகள்
சூறைக்காற்றுடன் மழை: 3 கடைகளின் மேற்கூரை பறந்ததால் பரபரப்பு
வடமதுரை அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3 கடைகளின் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் ஆன மேற்கூரை பறந்து சாலையில் விழுந்து நொறுங்கின.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியில், நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள கடைகளின் மேற்கூரை பறந்து சாலையில் விழுந்தன. குறிப்பாக வாலிசெட்டிபட்டி செல்லும் சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திருமலைசாமி என்பவருக்கு சொந்தமான 3 கடைகளின் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் ஆன மேற்கூரை பறந்து சாலையில் விழுந்து நொறுங்கின.
இதேபோல் அப்பகுதியில், 3 இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.