செய்திகள்
நிவர் புயல் நிவாரணப் பணிக்கு ரூ.3,758 கோடி வழங்கவேண்டும் - மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை
நிவர் புயல் நிவாரணப் பணிக்கு ரூ.3,758 கோடி வழங்கவேண்டும் என மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று சென்னை வந்தடைந்தது. நிவர் புயலால் பாதிப்பு அடைந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் 5-ம் தேதி வரை உள்ள இயல்பான மழையளவு 377.1 மி.மீ., 385.5 மி.மீ. அளவு பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவைவிட 2 சதவீதம் கூடுதலாகும்.
தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில், 3 ஆயிரத்து 487 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. மத்திய குழுவினர் புயல் சேதம் குறித்து நாளை (இன்று) முதல் ஆய்வில் ஈடுபட உள்ளனர். சேத மதிப்பீடு குறித்து மத்திய குழுவினரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. தற்காலிக நிவாரணமாக ரூ.650 கோடி தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்பிற்கு ரூ.3 ஆயிரத்து 108 கோடியும் மொத்தமாக ரூ.3 ஆயிரத்து 758 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.