செய்திகள்
வைரல் வீடியோவுக்கும் அந்த போராட்டத்திற்கும் தொடர்பா?
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குடியுரிமை திருத்த சட்டத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் புதிய வீடியோ இணைந்துள்ளது.
வைரல் வீடியோவில், பொது இடத்தில் இளைஞர்கள் ஒன்று கூடி கைத்தட்டி நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோ முடிவில் நடனமாடிய பெண் ஒருவரை அவரது தாயார் ஓங்கி அறைகிறார். வீடியோவிற்கு, 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர் அவரது தாயாரை சந்தித்த போது' எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவை ஆய்வு செய்ததில், இது நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இதே வீடியோ 2016-ம் ஆண்டு வைரலானது. இந்த சம்பவம் கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். உண்மையில் கல்லூரி பாடத்தை புறக்கணித்துவிட்டு சாலையில் நண்பர்களுடன் நடனமாடியதால் பெண்ணின் தாயார் அவரை தாக்கியிருக்கிறார்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.