செய்திகள்
விபத்து

ராயக்கோட்டை அருகே மைல் கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2019-12-04 16:50 GMT   |   Update On 2019-12-04 16:50 GMT
ராயக்கோட்டை அருகே சாலையோர மைல் கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்துள்ள கருக்கம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது39). விவசாயி. இவரது மனைவி மாரி (34). இவர்களது மகன் நித்யானந்தம் (12), மகள் லேசமலர் (9). இந்த நிலையில் பழனி வேலை சம்மந்தமாக தனது மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தக்காளி மண்டி அருகே முள்ளம்பட்டி என்ற இடத்தில் சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோர மைல் கல் மீது மோதி சரிந்தது. இதில் பழனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் போகும் வழியிலேயே ஆம்புலன்சில் பழனி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News