விருதுநகர் அருகே முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக்கொலை: கணவன்-மனைவி கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது48), விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள்.
இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சம்பத்குமார் மனைவி முத்தம்மாள் என்பவருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று ராஜேந்திரன் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சம்பத்குமார், மனைவி முத்தம்மாள், மகன் பொன்னுச்சாமி ஆகியோர் இங்கு தண்ணீர் பிடிக்கூடாது என ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சம்பத்குமார் உள்பட 3 பேர் கட்டையால் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையில் படுகாயங்களுடன் கிடந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சம்பத்குமார், முத்தம்மாளை கைது செய்தனர். தலைமறைவான பொன்னுச்சாமியை தேடி வருகின்றனர்.
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் விவசாயி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.