வழிபாடு
சன்னிதானத்தில் நெய்தோணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தேவஸ் தான ஊழியர்கள் சுத்தம் செய்ததை படத்தில் காணலாம்.

சபரிமலை தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி

Published On 2021-12-30 02:28 GMT   |   Update On 2021-12-30 02:28 GMT
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் 41 நாட்கள் நடைபெற்றது. இந்த பூஜைகளின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அடுத்த மாதம் 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெறும்.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன் பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் கூறியதாவது:-

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை காலம் வரை ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன் பதிவு மூலம் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மகர விளக்கை முன்னிட்டு கூடுதல் பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும். உடனடி தரிசனத்திற்கு முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம், எருமேலி, நிலக்கல், கோட்டயம், கொட்டாரக்கரை உள்பட 10 இடங்களில் உடனடி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி. ஆர். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News