செய்திகள்
துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம்? என ஸ்டாலின் விளக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின், விரக்தியின் விளிம்பிற்கு சென்று வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து கூறுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டாசு உற்பத்தி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பட்டாசுக்கு தடை விதித்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தடையை நீக்குமாறு கடிதம் எழுதினேன். நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்துகளின் அடிப்படையில் விரைவில் முடிவெடுக்கப்படும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.
மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறும் ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என விளக்க வேண்டும். அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின், விரக்தியின் விளிம்பிற்கு சென்று வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து கூறுகிறார். அமைச்சர் மரணத்தில் என்ன மரணம் என்பதை அவர் கூற வேண்டும். துரைக்கண்ணுவின் மரணத்தை விமர்சித்து ஸ்டாலின் பேசுவது மனிதாபிமானமற்ற செயல். மதம்சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது என சட்டத்தின் வாயிலாகவே அறிவுறுத்துகிறோம். சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; இதில் பாரபட்சம் காட்டப்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.