செய்திகள்
கொரோனா விதிமுறைகளை மீறியதாக செல்போன் கடைக்கு சீல் வைப்பு
செல்போன் கடையில் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி:
கொரோனா பரவல் காரணமாக அரசு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் நேற்று திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். தகவல் அறிந்ததும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து கொரோனா விதிமுறைகளை மீறியதாக கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.