செய்திகள்
அவினாசி கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருப்பணிகள் தொடங்காததால் கோவிலில் பல இடங்களில் கட்டுமான பணிகள் சேதமடைந்துள்ளன.
அவிநாசி:
கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மையானது அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்.
சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.13 ஆண்டு ஆனது. கடந்த 1980ல், சுவாமிக்கு 7 நிலையிலும், அம்மனுக்கு 5 நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
பின் 1991 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்து ஆகம விதிப்படி ஒரு கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அவ்வகையில் அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகி விட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில் கட்டுமான பணிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக,அபிஷேக நீர் வெளியேறாமல் அடிக்கடி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
சித்திரை தேர்த்திருவிழாவில் உற்சவமூர்த்திகள் அமர்ந்து வலம் வரும் வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது.
ராஜகோபுரத்தின் உச்சியில் தேனீக்கள் ராட்சத தேன் கூடு கட்டியுள்ளது. தேன் கூடு கலைந்தால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவற்றை நிவர்த்தி செய்ய முன் வருவதில்லை. எனவே கோவிலில் திருப்பணிகளை உடனே தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்றனர்.