கன்வேயர் பெல்டில் சிக்கி தொழிலாளி பலி- என்.எல்.சி. அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்டு
நெய்வேலி:
சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் சக்திவேல் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என்.எல்.சி. உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்வெயர் பெல்டில் நிலக்கரியை சுமந்துசெல்லும் இரும்பு ரோலர்களை சரிபார்த்தபோது, சக்திவேல் இதில் சிக்கி இறந்ததாக தெரியவந்தது.
இதுதொடர்பாக 2-ம் அனல் மின்நிலைய பாய்லர் பிரிவு துணைபொதுமேலாளர் ராமலிங்கம், துணை முதன்மை பொறியாளர் எழிலரசன் ஆகியோரை என்.எல்.சி. நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.