உள்ளூர் செய்திகள்
பாலமலை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்.

பாலமலை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-17 08:48 GMT   |   Update On 2022-04-17 08:48 GMT
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.
கவுண்டம்பாளையம்: 

கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள பாலமலை ஸ்ரீஅரங்கநாதர்  கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 10-ந்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொரோனா தொற்றால் கடந்த 3 வருடங்களாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் விழா தொடங்கியது. இதில் 11-ந்  தேதி அன்னவாகனத்திலும், 12-ந்  தேதி அனுமந்த வாகனத்திலும், 13-ந்  தேதி கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 

14&ந்  தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 15-ந் தேதி செங்கோதை, பூங்கோதை  தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று   மாலை 3 மணியளவில் தொடங்கியது. 

இதில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாடவீதிகளில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.

 அதன்பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள்புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப் பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கு பெற்ற நாட்டியஞ்சலி, பல்வே று ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.
Tags:    

Similar News