செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

ஆயுத பூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வாழ்த்து

Published On 2021-10-13 08:42 GMT   |   Update On 2021-10-13 09:38 GMT
அழிவில்லாத கல்வி செல்வத்தை தரும் கலைமகள், மன உறுதியுடன் கூடிய துணிவை தரும் மலைமகள், அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் திருமகள் ஆகியோரை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் 9-வது நாளில் ஆயுத பூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்“ என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலை நாட்டப்படும்.

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும், “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதனையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.



அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

உழைப்பின் சிறப்பையும், தொழிலின் மேன்மையையும் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நன்னாளில் அனைத்து தொழில் செய்பவர்களும் இன்னல்களில் இருந்து மீண்டெழுந்து ‘இனி எல்லாம் நலமே’ என்கிற அளவுக்கு நன்மைகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். ‘உழைப்புதான் இந்த உலகை இயக்குகிற உன்னத சக்தி’ என்பதை நிரூபிக்கும் விதமாக உழைப்பவர்கள் அனைவரும் உயர்ந்திட வேண்டும் என அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

இன்னல்களை போக்கும் துர்கா தேவியை மூன்று நாட்களும், பொருளாதார சிக்கல்களை தீர்க்க வல்ல லட்சுமி தேவியை மூன்று நாட்களும், அழியா செல்வமான அறிவுச் செல்வத்தை தரக்கூடிய சரஸ்வதி தேவியை மூன்று நாட்களும் நவராத்திரி நாட்களில் வழிபட்டு
ஆயுத பூஜை
மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நம் வாழ்வு உயர உறுதுணையாக இருக்கும் தொழில் மென்மேலும் பெருக, தொழில் கருவிகளையும், எந்திரங்களையும் பூஜித்து, கல்வி செல்வம் பெருக நோட்டு, புத்தகங்களை பூஜித்து நீடித்து நிலைக்கும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் கிடைக்க முப்பெரும் தேவியரை போற்றி வணங்குவோம்.

மகிஷாசுரன் என்னும் அரக்கனை அன்னை அழித்து வெற்றி வாகை சூடிய திருநாளாம் விஜயதசமி திருநாள், மக்கள் தாங்கள் செய்யும் நற்செயல்களில் உள்ள தீமையை விலக்கி நன்மை அருளும் நன்னாளாக அமையட்டும். நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடும் அனைத்து சொந்தங்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ்:-

ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். அழிவில்லாத கல்வி செல்வத்தை தரும் கலைமகள், மன உறுதியுடன் கூடிய துணிவை தரும் மலைமகள், அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் திருமகள் ஆகியோரை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். செய்யும் தொழிலே தெய்வம், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் 9-வது நாள் தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடியில் படைத்து வழிபடும் நாள் ஆயுதபூஜை திருநாள் ஆகும்.

இந்நன்னாளில் கொரோனா எனும் அரக்கனிடம் இருந்து தடுப்பூசி என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தடைகளை வெற்றி கொள்ள சபதம் ஏற்போம்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா:-

மக்களால் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்கள் தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

நவராத்திரி விழாவின் 9-வது நாளில் ஆயுத பூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags:    

Similar News