செய்திகள்
கமல்ஹாசன்

பட்ஜெட்டில், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டுக்கு சிறப்பு திட்டம்- கமல்ஹாசன்

Published On 2021-07-21 07:14 GMT   |   Update On 2021-07-21 07:14 GMT
உள்ளாட்சி அமைப்பானது, உள்ளூர் தேவைகளை திட்டமிடுவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு, சுதந்திரமாக செயல்படும் அதிகாரம், உரிய நேரத்தில் நிதி ஆகியவை அவசியமாகின்றன.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம்.

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதும் மக்கள் நீதி மய்யத்தின் முதன்மையான அரசியல் செயல்பாடுகளுள் ஒன்று. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படுவதற்கு இருக்கும் பல தடைகளில் முக்கியமான ஒன்று நிதியாதாரம் இல்லாமையே. விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டு முறை குறித்து சிந்திப்பது அவசியமாகிறது.

பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கீடு என்பதுதான் பட்ஜெட்டின் வழக்கமான அறிவிப்பாக இருக்கும். ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை என்றைக்கு வரும், எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளாட்சித் தலைவர்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்வது கவனிக்கப்பட வேண்டியது.

இன்னும் சொல்லப்போனால், பல கிராம ஊராட்சிகளில் நிதி இல்லாததால் பணிகள் பாதியில் நிற்பதைக் காணலாம். ‘நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’ என்பது தான் ஊராட்சித் தலைவர்களிடமிருந்து கிடைக்கும் பதிலாக இருக்கும்.

உள்ளாட்சி அமைப்பானது, உள்ளூர் தேவைகளை திட்டமிடுவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு, சுதந்திரமாக செயல்படும் அதிகாரம், உரிய நேரத்தில் நிதி ஆகியவை அவசியமாகின்றன.

மாநில சுயாட்சி என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தி.மு.க, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்தே உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவான சிறப்புத் திட்டத்தை முன்னெடுப்பது சிறந்தது.

கேரள அரசின் பட்ஜெட்டில் இணைப்பு அறிக்கை 4 என்பது உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியையே ஆதாரமாகக் கொண்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு, தேவையான காலத்தில் நிதி கிடைக்காவிட்டால் மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கிவிடும்.


இந்த கொரோனா காலத்தில் ஊரைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊராட்சிகளுக்கு உத்தரவு வழங்கிய அரசு, அதற்கான நிதியை உரியகாலத்தில் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்பதை பிரகடனப்படுத்தும் தமிழ்நாடு அரசு ஊரக, உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். கேரள முதல்-அமைச்சரின் நிவாரண நிதி இணையதளம் சிறப்பாக இருக்கிறது என்று அந்த நடைமுறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அதுபோல, பட்ஜெட்டின்போது உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வு குறித்த தெளிவான விவரங்களைத் தனியாக ஓர் இணைப்பு அறிக்கையாக வெளியிட வேண்டும்.

மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. மா.பொ. சிவஞானம், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் மாநில சுயாட்சிக்கானப் பாதைகளை முன்னெடுத்தவர்கள். அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்புத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News