செய்திகள்
ஓசூரில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஓட்டல்களில் உணவு வகைள் மற்றும் சிக்கன் பிரியாணி தரமின்றி தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு ஓட்டல் இருந்த சிக்கன் பிரியாணியை மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பிரியாணி உணவு மாதிரி தரம் குறைவாகவும், சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர, சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் ஜே.எம்.-2 கோர்ட்டில் ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், தரமற்ற முறையிலும், பாதுகாப்பற்ற முறையிலும் சிக்கன் பிரியாணியை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் மற்றும் கோர்ட் கலையும் வரை 1 நாள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.