கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராமமூர்த்தி (வயது 55). கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை அவர் உயிர் இழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் கொரோனாவுக்கு 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 266 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 505 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 991 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உள்ளது.