செய்திகள்
ஓடும் பஸ்சில் பயணிகளுடன் அமர்ந்து பயணித்த குரங்கால் பரபரப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் பயணிகளுடன் அமர்ந்து குரங்கு பயணித்த சம்பவத்தால் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மூணாறு:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் இருந்து மூணாறுக்கு கேரள அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வெள்ளதூவல் என்னுமிடத்தில் மலைப்பாதையில் பஸ் மெதுவாக சென்றது. அப்போது வனப்பகுதியில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று திடீரென்று பஸ்சுக்குள் தாவியது.
பின்னர் அந்த குரங்கு டிரைவர் இருக்கையின் பின்பகுதியில் உள்ள கம்பியில் உட்கார்ந்தபடி ஒய்யாரமாக எந்தவித பயம் இல்லாமல் பயணம் செய்தது. இதனை பார்த்த பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். சில பயணிகள் குரங்கு அமர்ந்து இருப்பதை டிரைவரிடம் தெரிவித்தனர். இதை கவனித்த அவர் பஸ்சை நிறுத்தினார். உடனே அந்த குரங்கு பயணிகள் இருக்கை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
பின் இருக்கையில் இருந்த சிலர் கூச்சலிட்டதால் அந்த குரங்கு பஸ்சை விட்டு ஜன்னல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பஸ்சில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.