செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தை மாதம் முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் என அறிக்கை

Published On 2020-11-22 19:10 GMT   |   Update On 2020-11-22 19:10 GMT
தை மாதம் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோட்டையில் தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது தி.மு.க. தான். நாம் எடுத்துவைக்கின்ற அடிதான், ஆட்சியாளர்கள் மீதான சம்மட்டி அடியாக விழுகிறது. அதன்பிறகே, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துயில் கலைந்து மெல்ல அசைகிறார்கள் என்பதற்கு, மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு தொடர்பாக, கவர்னர் மாளிகை முன்பு, தி.மு.க. நடத்திய மாபெரும் கண்டன பேரணியே சாட்சியாகும். ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த கோப்பு, திடீரென விழித்ததற்கு காரணம், தி.மு.க.வின் முரசொலித்த போர்க்குரல்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்வி கட்டணத்தை தி.மு.க.வே ஏற்கும் என நான் அறிவிப்பு வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பை பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடம் இருந்து திடீர் அறிவிப்பு வருகிறது. அதனால்தான் சொல்கிறேன், கோட்டையில் அ.தி.மு.க. இன்னும் சில மாதங்கள் இருக்கலாம். மக்களின் மனதில் குடிகொண்டிருப்பதும், அவர்களின் குறை தீர்ப்பதும் தி.மு.க.வே.

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மற்றொரு பிரமாண்டமான பரப்புரை பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதில், 15 பேர் மட்டுமின்றி, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், தேர்தல் பணிக்குழுச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான கம்பம் செல்வேந்திரன், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான், விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி, மகளிர் அணி துணைத்தலைவர் பவானி ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் இணைய இருக்கிறார்கள்.

முதற்கட்டமாக, தலைவர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இருந்து இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, நவம்பர் 20-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பெருமளவில் திரண்ட மக்களும், அனைத்து சமூகத்தினரும் அவருக்கு அளித்த வரவேற்பும் ஆள்வோரின் கண்களை உறுத்தியதால், உடனடியாக அவரை கைது செய்து அற்பத்தனமான அதிகார பலத்தை காட்ட முயற்சித்தது.

தி.மு.க. இந்த கொரோனா பேரிடர் கால விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு, காணொலி வாயிலாக, மகத்தான அளவில் நிகழ்வுகளை நடத்தி, மக்களை ஒருங்கிணைத்தபோது, “தி.மு.க ஏன் வெளியே வரவில்லை?” என்று கேட்ட அதே முதல்-அமைச்சரின் ஆட்சி நிர்வாகம்தான், தி.மு.க.வினர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பரப்புரை பயணத்தை மேற்கொண்டவுடனேயே, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா? தி.மு.க. குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய், லட்சிய கொடியேந்தி களத்தில் அடுத்தடுத்து அணிதிரளும்போது என்ன செய்யப்போகிறீர்கள்?

நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை உறவினர்களை பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, 4 ஆண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன்நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

நாட்டை நாசப்படுத்தி தமிழகத்தை வஞ்சித்துவரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப்பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். அந்த நம்பிக்கையுடன் நாம் கவனமாக களப்பணியாற்றுவோம்; நாள்தோறும் நம் மக்களைச் சந்திப்போம். அவர்களின் மனங்களை வெல்வோம்.

நம் தலைவர் கட்டிக்காத்த இயக்கத்தை ஆட்சியில் அமரவைத்து, அதனை தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாக பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும், அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News