செய்திகள்
செல்வமுருகன்

விருத்தாசலம் சிறையில் மர்ம மரணம்- கைதியின் சொந்த ஊரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

Published On 2020-11-12 06:45 GMT   |   Update On 2020-11-12 10:19 GMT
விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது சொந்த ஊரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திருட்டு வழக்கில் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளைசிறையில் அடைக்கபட்டிருந்தார். கடந்த 4-ந்தேதி இரவு செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இதை தொடர்ந்து செல்வமுருகனின் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரது சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யும் வேண்டும். அதுவரை இறந்த செல்வமுருகனின் உடலை வாங்க மாட்டோம் எனகூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் 7-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வழக்கை கடலூர் மாவட்ட சி.பி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை தீவிரபடுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. துணைபோலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் தலைமையில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் சொந்த ஊரான காடாம்புலியூரில் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தற்போது வசித்து வந்த வடக்குத்து பகுதியிலும், அவரை கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ்நிலையத்தில் உள்ள போலீசாரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந் தேதி பணியில் இருந்த அரசு டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் கிளை சிறை போலீசார் மற்றும் செல்வமுருகனுடன் இருந்த கைதிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வமுருகனின் மனைவி கூறுகையில் எனது கணவர் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மனுதொடர்பாக வருகிற 18-ந் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணை முடிவை பொறுத்தே நான் எனது கணவரின் உடலை வாங்குவேன். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றார்.
Tags:    

Similar News