செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

டெல்லியில் கொரோனா அதிகமாவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரம்- ராதாகிருஷ்ணன்

Published On 2020-11-22 09:09 GMT   |   Update On 2020-11-22 09:09 GMT
டெல்லியில் கொரோனா அதிகமாவதால் சென்னை விமான நிலையத்தில் வெப்ப கருவி மூலம் பயணிகளுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவது தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பொது மக்களிடம் விழிப்புணர்வு பணிகளை அதிகமாக்கியதால், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்றுமாசு அதிகம் ஏற்படுவதால், அதனால் பலர் பாதிக்கப்படும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகமாக பரவுவதால் பக்கத்து மாநிலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து தினமும் 3,000-க்கும் அதிகமானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதா வது:-

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக குறைந்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒரே தெருவில் 3 பேருக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது ஆஸ்பத்திரிகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புறநோயாளியாக வந்து சென்றாலும் சரி அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்ல விழிப்புணர்வு பணிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சென்னையை பொறுத்தவரை விமான நிலையம், ரெயில் நிலையங்களில் தொடர்ந்து வெப்ப கருவி மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் இருந்து பயணிகள் அதிகளவில் வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வெப்பகருவி மூலம் பயணிகளுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

சென்னை மாநகராட்சி கள உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் வீதி, வீதியாக விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News