லைஃப்ஸ்டைல்
வீட்டுக்குள் வெயிலின் தாக்கத்தை குறைக்க செய்ய வேண்டியவை...

வீட்டுக்குள் வெயிலின் தாக்கத்தை குறைக்க செய்ய வேண்டியவை...

Published On 2021-05-07 07:22 GMT   |   Update On 2021-05-07 07:22 GMT
வீட்டின் கூரைமீது சுடுமண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வளர்க்கலாம். இப்படி கட்டுமான பொருட்களை கையாளும்போது வீட்டில் வெயிலின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
வெயில் காலத்தில் வீட்டுக்குள் வசிப்பதே சிரமமான காரியம்தான். பகலில் சூரியனின் நேரடியான தாக்கம் இருக்கும். இரவில் நம் கான்கிரீட் கட்டிடங்கள் வெயிலை வாங்கிக் கொண்டு இரவில் உமிழும். அதனால் இரவு பகலைவிட சமாளிக்க முடியாததாக இரவு இருக்கும். இந்த வெயிலை முன் உணர்ந்து, அதைச் சமாளிக்கும் விதத்தில்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கைக்கு ஒத்துப்போகும் கட்டிடங்கள் கட்டினர்.

நம் பகுதிகளிலேயே கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை கட்டுமானப் பொருட்களாக பயன்படுத்தினார்கள். அவைதான் முன்மாதிரியான பசுமை வீடுகள். வீட்டின் கழிவுகளைச் சேமித்து வைத்து வயலுக்கு உரமாகப் பயன்படுத்தினார்கள். இயல்பாகவே நம் முன்னோர்கள் உருவாக்கிய பசுமை இல்லம் இன்று புதிய தொழில் நுட்பமாகி இருக்கிறது. உலகம் முழுவதும் இயற்கைக்கு நெருக்கமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கும் படியான வீடுகளைக்கட்டி தங்கள் வாழ்வை நடத்திவந்தார்கள். வீடுகளின் பல பகுதிகளை மரங்கள் ஆக்கிரமித்து இருந்தன. கதவுகள், சன்னல்கள், வீட்டின் கூரைகள், வீட்டைப் பிரிக்க மரத்தடுப்புகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு மரங்கள் உதவின. மரப்பலகைகள் வெப்பத்தை கடத்தாது, அதைத் தடுத்து நிறுத்திவிடும்.

எனவே அதிகமான வெயிலின் காரணமாக வெளியே வெப்பம் அதிகமாக இருந்தாலும்கூட வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் குளுகுளுவென்றிருக்கும். அதே போல் குளிர்காலத்தில் வீட்டின் வெளியே கடுமையான குளிர் நிலவும்போதும் வீட்டுக்குள் பெரிய அளவில் குளிர் தெரியாது. ஓரளவு கதகதப்பாகவே வீட்டின் தட்பவெப்பம் இருக்கும்.

இப்போது நமது இல்லத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. நவீனக் கட்டுமான பொருட்களும் பெருகிவிட்டன. அதிகமான பணத்தைச் செலவு செய்து, கான்கிரீட்டையும், இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தி நமக்கான வீடுகளை கட்டுகிறோம். மரங்களின் பயன்பாட்டை குறைத்துவிட்டோம். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் சில வசதிகளைப் பெற்றுள்ளோம் என்றாலும் வெப்பத்தில் இருந்து விடுதலை பெற மறந்துவிட்டோம்.

ஆனால் மரங்களாலான அந்தக் கால வீடுகளைக்கடந்து செல்லும்போது ஏதோ ஓர் ஏக்கம் வந்துசெல்கிறது. அந்தப் பழங்கால உத்தியைப் பயன்படுத்தி பலர் இப்போதும் வீடுகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டின் கூரைமீது சுடுமண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். தேவைக்காக அறைகளை பிரிக்க பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வளர்க்கலாம். இப்படி கட்டுமான பொருட்களை கையாளும்போது வீட்டில் வெயிலின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
Tags:    

Similar News