ஆன்மிகம்
திருவந்திபுரம் கோவில்

தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி திருவந்திபுரம் கோவில்

Published On 2021-01-02 05:01 GMT   |   Update On 2021-01-02 05:01 GMT
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.

கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

திருமணம்

திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

புனித தீர்த்தங்கள்

இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

தேசிகர் உற்சவம்

மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது. இந்த விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வருகிற அக்டோபர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தேசிகர் தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி 9-ம் நாள் உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய விழாவாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவோணம் நட்சத்திரத்தன்று தேசிகர் ரத்னாங்கி சேவை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் , பள்ளி கொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளில் சென்று வழிபடுகிறார்.

பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவம் தீர்த்தவாரி பெருமாள் தாயார் தேசிகருக்கு சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. இதையடுத்து கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை, மாலை இருவேளையும் தேசிகர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்

புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

இதில் முதல் சனிக் கிழமை, 2-வது சனிக் கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3-வது சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

கோவில் நடை  திறக்கும் நேரம்

இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.
Tags:    

Similar News