செய்திகள்
கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும்போட்டி

Published On 2019-11-15 02:42 GMT   |   Update On 2019-11-15 02:42 GMT
இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கொழும்பு :

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார்.

மொத்தம், 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

இலங்கையில் 37 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் கோத்தபய ராஜபக்சேவுக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு அவருக்கு உண்டு.



10 ஆண்டு காலம் ராணுவ துறைக்கு செயலாளராக இருந்த கோத்தபய, உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் சரண் அடைந்த விடுதலைப்புலிகளையும் கொன்று குவிக்க உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர் என்றால் அதன் பின்னணியில் இருந்தவர் கோத்தபய ராஜபக்சே.

இந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

1982-ம் ஆண்டுக்கு பிறகு பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகிக்கிறார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன ஆகுமோ என தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு விறுவிறுபாக்கவே இருக்கும். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
Tags:    

Similar News