ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்

கொரோனா பரவல் எதிரொலி: குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு திடீர் தடை

Published On 2021-03-23 04:40 GMT   |   Update On 2021-03-23 04:40 GMT
கொரோனா பரவல் எதிரொலியாக குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்க கூடாது எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 490 கோவில்கள் உள்ளன. இதில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வேளிமலை குமாரகோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பிரசித்தி பெற்றவை ஆகும்.

இந்த கோவில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இதற்கிடையே நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறு. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட கோவில்களுக்கு, தமிழக அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதம், அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தவோ, தீர்த்தம் கொடுக்கவோ கூடாது. திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிர்பந்தம் உண்டு என்றால், மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தலாம் என கூறியுள்ளது.

மேலும், கோவிலுக்கு வருகிற பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், கைகளை நன்றாக கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் கூடாமல் இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News