பிரிந்து வாழ்ந்த கணவர் குழந்தையை அழைத்து சென்றதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஹரி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் எஸ்தர் ராணி (வயது 29). இவருக்கும் வேலூர் மாவட்டம் செண்ட தூரை சேர்ந்த விக்டர் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எஸ்தர்ராணி கணவரை விட்டு பிரிந்து கடந்த 1½ வருடமாக தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரங்கினியை சேர்ந்த மஞ்சினி என்பவருடன் எஸ்தர்ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்தர்ராணி மஞ்சினியுடன் மீனாட்சி பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி எஸ்தர்ராணியின் முதல் கணவர் விக்டர் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி எஸ்தர்ராணி வசித்த வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அந்த குழந்தையை அவர் அழைத்து சென்று விட்டார். இதனால் எஸ்தர் ராணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதில் மனமுடைய அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் தான் வசித்த வாடகை வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
வெளியே சென்றிருந்த மஞ்சினி எஸ்தர்ராணி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எஸ்தர்ராணியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே எஸ்தர்ராணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை ஹரி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.