கன்னியாகுமரியில் இன்று பயங்கர கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்துவருகிறது. இன்று அதிகாலையில்இருந்தே கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சிஅளித்தது.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி இன்று அதிகாலையில் இருந்தே கடற்கரைக்கு வந்தனர். மழை காரணமாக இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த மழையினால் கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கடற்கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.
இந்த ராட்சத அலையை கண்டு கடலில் கால் நனைக்க சென்ற சுற்றுலா பயணிகள், கடலில் குளிக்க அச்சம் அடைந்தனர். இதேபோல கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் சுற்றுலா தளங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 4 நாட்கள் கொரோனாஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இன்று நான்காவது நாளாக இயக்கப்பட வில்லை.
மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு ஏற்கனவே வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளியே வர முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி குற்றாலம் சீசன் போல்”குளுகுளு” என்று மாறி விட்டது.