வழிபாடு
மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா 27-ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-24 04:57 GMT   |   Update On 2021-12-24 04:57 GMT
அஷ்டமி திருவிழா தேர் வெளிவீதிகளில் வலம் வரவேண்டும். ஆனால் மழையால் வெளிவீதி சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனை விரைவாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா தினத் தன்று சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.

இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கீழமாசி வீதி தேர்முட்டி பகுதியில் மூங்கில் கம்பால் செய்யப்பட்ட மேற்கூரையை சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

அஷ்டமி திருவிழா தேர் வெளிவீதிகளில் வலம் வரவேண்டும். ஆனால் மழையால் வெளிவீதி சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனை விரைவாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் ஆதிசேஷன் கூறும் போது, அகிலத்தில் உள்ள தன் படைப்புகளுக்கு படியளக்க தானே தெருவில் இறங்கி நம்மை நாடி வந்து அரிசி கொடுத்து படியளக்கும் அற்புத நிகழ்வான அஷ்டமி சப்பரம் நிகழ்வு வருகிற 27-ந் தேதி காலை வெளிவீதியில் நடக்கிறது. எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அஷ்டமி சப்பரம் உலா வரும் வெளி வீதிகளில் உள்ள சாலைகள் மற்றும் மேடு பள்ளங்களை சரி செய்து தேர் சிறப்பாக பவனி வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தேர் பவனி வரும் வீதிகளை நன்றாக சுத்தப்படுத்தி துப்புரவு பணிகளை செய்து தயாராகிக்கிட வேண்டும். தற்போது பனிக்காலமாக இருப்பதால் அதிகாலையில் அஷ்டமி சப்பரம் வரக்கூடிய வீதிகளில் தெரு விளக்குகள் காலை 6.30 மணிக்கு வரை ஔிர்ந்திட மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News