செய்திகள்
நளினி-முருகன்

வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு

Published On 2021-02-21 02:53 GMT   |   Update On 2021-02-21 02:53 GMT
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுப்படி கணவன்-மனைவி 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் ஜெயிலில் சந்தித்து பேசி வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது.

அதனால் நளினி-முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் ஜெயில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் முருகன் கடந்த 3-ந் தேதி வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் முதற்கட்டமாக 30 நிமிடங்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் நேற்று நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது. ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை வேலூர் ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் வைத்து சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார். இந்த சந்திப்பு காலை 9.35 முதல் 10.05 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News