உள்ளூர் செய்திகள்
பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம்
அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிகளை பார்வையிட்டு கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் குழுக்கள் அமைத்து பழுதடைந்த மற்றும் இடிக்க வேண்டிய பள்ளிக் கட்டிடங்களை கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உதவி செயற்பொறியாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட பொறியாளர், பள்ளித் தலைமையாசிரியரை உள்ளடக்கிய குழுவினர் பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு பள்ளிகளை பார்வையிட்டு கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வறிக்கை பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றிய அலுவலகம் வசம் ஒப்படைக்கப்படவும் உள்ளது. அதற்கேற்ப, ஓரிரு நாட்களில் அத்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு செய்து இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கூறுகையில்:
பள்ளிகளின் கட்டிட உறுதித்தன்மை அறிக்கை பெறப்பட்டு வருகிறது. அவ்வகையில் இடிக்க வேண்டிய கட்டிடங்கள் அதிகம் இடம் பெறுகின்றன.
அப்பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இடிக்கப்படும். ஒப்பந்ததாரர் வாயிலாக இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ள டெண்டர் கோரப்படவும் உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்றனர்.