செய்திகள்
கோப்புபடம்

ஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற கும்பல்

Published On 2021-02-20 09:35 GMT   |   Update On 2021-02-20 09:35 GMT
ஆரல்வாய்மொழி அருகே முன் விரோதம் காரணமாக கோழிகள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர்கள் இரு வரும் ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றில் செட் அமைத்து கோழிப்பண்ணை வைத்துள்ளனர்.

கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் சிலரும் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம்போல் கோழிகளுக்கு தீவனங்கள் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க சென்றனர்.

அப்போது கோழிகள் இறந்துகிடந்தது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தது. இதை பார்த்த ஊழியர்கள் கோழிப்பண்ணை நடத்தி வரும் சுரேஷ், ராஜேசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோழிப்பண்ணை யின் வளாகத்தில் வி‌ஷ பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கோழிகளை மர்ம நபர்கள் வி‌ஷம் வைத்து கொன்றிருப்பது தெரியவந்தது.

கோழிகளை எதற்காக வி‌ஷம் வைத்து கொன்றார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோழிப்பண்ணை நடத்தி வருபவர்களுக்கும், வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. முன் விரோதம் காரணமாக கோழிகள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோழிகள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News