கயத்தாறு அருகே முயல் வேட்டையாடிய 3 பேர் கைது
கயத்தாறு:
கோவில்பட்டி வனச்சரக அலுவலர் சிவராம், வனவர்கள் நாகராஜ், ஆனந்த் மற்றும் வன காவலர்கள் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி, கயத்தாறு கிராமப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கயத்தாறு அருகே குமாரபுரம் ரெயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டு இருந்த 3 பேர், வனத்துறையினரை பார்த்ததும் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் விரட்டிச்சென்று பிடித்தனர்.
விசாரணையில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பை சேர்ந்த செல்வம் மகன் கண்ணன் (வயது 23), விஜயன் மகன் ரமேஷ் (22), குட்டி மகன் அப்பு (19) ஆகியோர் என்பதும், காட்டுப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து முயல் வேட்டைக்கு பயன்படுத்தக்கூடிய மைக்ரோ மின்மோட்டார் கருவிகள், டார்ச்லைட் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலர் சிவராம் கூறுகையில், “கோவில்பட்டி வனச்சரக பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் வேட்டை நடப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 9789183034, 8682957177, 8870668682 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்“ என்றார்.