செய்திகள்
தேர்தல் கமிஷன்

6 மாதத்தில் ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது - தேர்தல் கமிஷன்

Published On 2020-12-19 22:53 GMT   |   Update On 2020-12-19 22:53 GMT
6 மாதங்களில் பணி ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் கமிஷன் இதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து உள்ளது. இந்தநிலையில் மேற்கண்ட 5 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலங்களின் தற்போதைய சட்டசபைகளின் காலம் முறையே தமிழகம் மே 24-ந் தேதி, கேரளா ஜூன் 1, புதுச்சேரி ஜூன் 8, மேற்கு வங்காளம் மே 30, அசாம் மே 31-ந் தேதிகளில் முடிவடைகிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதிசெய்ய தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களிலோ அல்லது ஒரே பகுதியில் நீண்டகாலமாகவோ பணியாற்றி இருக்கக்கூடாது என்பன போன்ற நிலையான கொள்கைகளை தேர்தல் கமிஷன் பின்பற்றி வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இது தொடர்பான அறிவிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. எனவே, தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கீழ்க்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

*அதிகாரிகளை அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தக்கூடாது.

*ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கக்கூடாது.

*தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் இதற்கு முந்தைய தேர்தல்களின்போது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவராக இருக்கக்கூடாது. அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர்களையும் தேர்தல் பணியில் அமர்த்தக்கூடாது.

*இந்த அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அனைவரது கவனத்துக்கும் உரியநேரத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News