செய்திகள்

கேரளாவில் வாக்களிக்க வந்த 8 பேர் உயிரிழப்பு

Published On 2019-04-24 03:52 GMT   |   Update On 2019-04-24 03:52 GMT
கேரளாவில் வாக்களிக்க வந்த முதியவர்கள் உள்பட 8 பேர் திடீரென இறந்தனர். மேலும் 4 அதிகாரிகள் மயக்கம் அடைந்தனர். #LokSabhaElections2019
திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் 3-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. அந்த வகையில் கேரளாவில் நேற்று நடந்த தேர்தலில் அந்த மாநில மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட வந்த ரோசம்மா (வயது 84) என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதேபோல் கண்டியூர் அருகே பிரபாகரன் (74), காசர்கோடு அருகே பாபுராஜ் (55), தளிபரம்பு என்ற இடத்தில் வேணுகோபால மாரர் (57), கொல்லம் அருகே பர்ஷன் (63), காலடி என்ற இடத்தில் தெரசாகுட்டி (87), தலசேரியில் முஸ்தபா (52), ரன்னி என்ற இடத்தில் சக்கே மேத்யூ (66) ஆகியோர் ஓட்டு போட வந்த இடத்தில் வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென மயங்கி விழுந்து இறந்தனர்.

இதனிடையே சாளக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த 2 தேர்தல் அதிகாரிகள் திடீரென மயங்கி விழுந்தனர். இதேபோல் ஏனாதிமங்கலம், பிரலசேரி ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் இருந்த 2 அதிகாரிகளும் மயங்கினர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. #LokSabhaElections2019
Tags:    

Similar News