செய்திகள்
சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு- 5 பேர் உடல் சிதறி பலி
மேற்கத்திய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் அமைப்பு தனது வானொலி மூலம் தெரிவித்துள்ளது.
மொகதிஷு:
சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகடிஷுவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
அவ்வகையில், மொகடிஷுவில் உள்ள ஒரு பள்ளியின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சமயத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதிப் படையினரின் பாதுகாப்புடன் வந்த மேற்கத்திய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் அமைப்பு தனது வானொலி மூலம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் அதிகாரிகளை அழைத்துச் சென்றதாகவும், நான்கு பாதுகாவலர்கள் காயமடைந்ததைக் கண்டதாகவும் நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.