செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் காரியாபட்டியை சேர்ந்தவர் மரியான் (வயது 55). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் சரக்குகளை ஏற்றி கொண்டு நேற்று மாலை தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் நாங்குநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஞானராஜ் (38), பாண்டி (44), தாமஸ் (62) ஆகியோர் இருந்தனர்.
ஆட்டோ ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஞானராஜ், பாண்டி, தாமஸ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞானராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.